சரக்கு வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரக்கு வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமியத்தை 439 சதவீதம் முதல் 1117 சதவீதம் வரை உயர்ந்த இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மார்ச் 7 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்த போது எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் பிரீமியம் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து மனு தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு, மற்றும் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் 4 வாரத்தில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.