மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மை தேர்வில் ஐபிஎஸ் அதிகாரி காப்பி அடிக்க உதவிய ராம் பாபு பலகுடு என்பவர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. சென்னையில் மொத்தம் 763 பேர் தேர்வெழுதினர். இதில் நெல்லையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளாராக உள்ள சபீர் கரீம் என்பவர் தேர்வில் முறைகேடு செய்ததாக சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் அவருக்கு உதவிய ராம் பாபு பலகுடு, சம்சுதின் உள்ளிட்டோரும் கைது செய்துப்பட்டனர்.
இந்நிலையில் சபீர் கரீமின் மனைவிக்கு மட்டும் ஜாமீன் வழங்கிய எழும்பூர் நீதிமன்றம், சபீர் கரிம் மற்றும் ராம்பாபு பலகுடுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, ராம்பாபு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் காவல் துறையினர் தவறாக தன்னை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.