ஐ.ஆர்.எஸ். அதிகாரி மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முன்பு 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வரதட்சனையாக எழுதித்தர கேட்டதாக சென்னையைச் சேர்ந்த டாக்டர் மணமகள் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் டாக்டர் மணமகள். இவர் போலீஸ் கமிஷனர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் மருத்துவத்தில் எம்.டி. படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றிவருகிறேன். கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண இணையதளம் மூலம் அறிமுகமான மறைமலை நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் பாலமுரளிதரனுக்கும் எனக்கும் திருமணம் நடத்த இருவீட்டினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி என்றும் மாப்பிள்ளை பாலமுரளிதரன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பணிபுரிது வருகிறார்.
திருமண பேச்சுவார்த்தையின்போது 50 லட்சம் ரூபாய், மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு, சொகுசு கார் ஆகியவற்றை வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டினர் கேட்டனர். இதையடுத்து 12.8.2019-ம் தேதி, மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்ற எங்கள் குடும்பத்தினர் வரதட்சணையாக கேட்ட 50 லட்சம் ரூபாயில் முன்பணமாக கார் வாங்குவதற்கு 10 லட்சம் ரூபாயைக் கொடுத்தனர். அந்தப் பணத்தில் மாப்பிள்ளையின் அம்மா பெயரில் புதிய கார் ஒன்றை அவர்கள் வாங்கியுள்ளனர்.
நவம்பர் 29-ஆம் தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு திருமண பத்திரிகை அடிக்கப்பட்டுவிட்டது. டிருமணநாள் நெருங்கிவிட்ட நிலையில், பெண் வீட்டாராகிய நாங்கள் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து திருமணப் பத்திரிகையும் கொடுத்துவிட்டோம்.
இந்த நிலையில், திருமண நாள் நெருங்கிவிட்ட நிலையில் திடீரென பெருந்தொகையும் இரண்டு வீட்டையும் எங்களது பெயரில் இப்பொழுதே பத்திரப்பதிவு செய்து கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் என்று மணமகன் பாலமுரளிதரன் மற்றும் அவரது பெற்றோர்களும் எங்களை மிரட்டுகிறார்கள். திருமணத்தை நிறுத்திவிட்டார்கள். இதற்கு முன்பே கார் வாங்குவதற்கு தேவையான பணத்தை எங்களிடம் வாங்கி காரும் வாங்கிவிட்டார்கள். இந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவர்கள் வீட்டின் அருகில் விசாரித்த வகையில் மணமகன் பாலமுரளிதரனும் அவரது பெற்றோர்களும் இதே முறையில் பல பெண்களை திருமணம் செய்வதாக சொல்லி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது வாடிக்கைதான் என்பது தெரியவருகிறது.
இந்தப் பிரச்னைகளால் நான் கடும் மனஉளைச்சலில் உள்ளேன். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய மாப்பிள்ளை வீட்டினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாங்கள் வரதட்சணையாகக் கொடுத்த முன்பணத்தையும் திரும்பப் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் காவல்துறைவரை சென்றுவிட்டதால் தற்போது மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் மணமகள் விட்டாரிடம் புகாரை வாபஸ் பெறும்படியும் வரதட்சனை பணத்தையும் திரும்பத் தருகிறோம் எனச் சொல்வதாகக் கூறப்படுகிறது. மேலும், பணம் கொடுத்ததற்கான அனைத்து ஆதாரங்களும் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மணமகள் வீட்டார் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இதற்கு மாப்பிள்ளை பாலமுரளிதரன் வீட்டார் தவறான புகார் கொடுத்துள்ளனர். விரைவில் என்ன நடந்தது என்பதை விளக்கமாக தெரிவிப்பதாக கூறுகின்றனர்.
ஆனால், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸாரோ இது வரதட்சணைப் புகார். அதனால், இருவீட்டினரையும் விசாரித்தபிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். மணமகன் வீட்டினர் அளிக்கும் தகவலுக்குப்பிறகு வழக்குப்பதிவு செய்யப்படும் என்கின்றன.
அதேநேரத்தில் இந்த பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காண பேச்சுவார்த்தையும் நடப்பதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.