சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தராவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சிலைக்கடத்தல் தொடர்பான பல வழக்குகளை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து வருகிறார். சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு, அதை செயல்படுத்த 21 வழிக்காட்டுதல்களையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அந்த வழகாட்டுதலின் படி, ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும், இதற்கான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசு போதுமான வசதிகளை அளிக்கவில்லை என பொன்மாணிக்கவேல் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி மகாதவேன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் , "சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு செயலிழந்து விட்டதா?. ஒரு சிலை செய்ய 40 ஆண்டுகள் வேண்டும் என்ற ரத்தக்கண்ணீர் வரலாறு அரசுக்கு தெரியுமா? ரத்தக்கண்ணீர் வரலாற்றை படித்ததால் தான், சிலைக் கடத்தல் வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறேன். உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றத்துடன் விளையாடாதீர்கள். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான வசதிகளை அரசு செய்யாவிட்டால் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும். இன்னும் இரண்டு வாரத்தில் வசதி செய்து தராவிடில், தலைமை செயலர், அறநிலைய ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்" என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.