மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்த விசாரணையை ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து இன்று தொடங்கவிருந்தார். ஆனால், இன்று அவர் விசாரணயை ஆரம்பிக்கவில்லை என்றும், வரும் புதன்கிழமை(நவ.1) முதல் தொடங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைப் பெற்ற அவரை, கவர்னர், எதிர்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட யாரும் சந்திக்கவில்லை. இந்நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அவரை பார்த்துக் கொண்ட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை சுற்றி நின்றனர். இது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன.
இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுக்குழுவும் செயற்குழுவும் கூடியது. அதில், சசிகலாவை தற்காலிக பொது செயலாளராக தேர்வு செய்தனர். பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்ற சில நாட்களில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடி சசிகலாவை முதல்வராக தேர்வு செய்தனர்.
அடுத்த சில நாட்களில் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து, தனது மவுனத்தைக் கலைத்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக சொன்னார். மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓ.பி.எஸ் பின்னால் 12 எம்.எல்.ஏ.க்கள் அணி வகுத்தனர். இரட்டை இலை சின்னம் முடங்கியது. இதனிடையே சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். எடப்பாடி பழனிச்சாமி இரு அணிகளையும் இணைக்க முயற்சி எடுத்தார்.
ஓபிஎஸ் தரப்பில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை எடப்பாடி தரப்பு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து இரு அணிகளும் இணைந்தது. சசிகலா நியமனம் செய்த டிடிவி தினகரனை அவர்கள் ஒதுக்கி வைத்தனர்.
அடுத்தபடியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். நீதிபதி ஆறுமுகசாமிக்கு எழிலகத்தில் உள்ள கலச மாகாலில் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி, காலை 10 மணிக்கு கலச மகாலில் உள்ள அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்து போயஸ் கார்டன் சென்று விசாரணையை தொடங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செபடம்பர் 22, 2016 அன்று வீட்டில் பணியில் இருந்த ஊழியர்கள் யார்? பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்த பட்டியலை அவர் போலீசாரிடம் இருந்து பெற்றுள்ளார். அவர்கள் அனைவரும் இன்று ஆஜராக வாய்ப்பு இருந்தது. இவர்கள் அனைவரிடமும் போயஸ் கார்டன் வீட்டில் வைத்து விசாரணை நடத்த இருந்தார்.
ஜெயலலிதாவுடன் வீட்டில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் சசிகலாவும் இளவரசியும். இவர்கள் இருவரும் இப்போது பெங்களூரு சிறையில் உள்ளனர். அவர்கள் இருவரிடமும் வீடியோ கான்பரன்சிங்க் முறையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக, விசாரணை கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் ஒரிரு வாரங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே அப்பலோ மருத்துவமனை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் இன்று தனது விசாரணையை தொடங்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் விளக்கம் அளித்த பின்னரே விசாரணை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த 15 நபர்களும் யார் யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் விளக்கம் அளிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 2 நாட்கள் கழித்து, புதன் கிழமையிலிருந்து நீதியரசர் தனது விசாரணையை முழு வீச்சில் தொடங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.