ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக ஏ.கே.வேலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை, ஆளுநரை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை என தெரிகின்றது.
ஜெயலலிதா சாதாரண குடிமகன், அல்ல அவர் மாநிலத்தின் முதல்வர். எனவே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிட வேண்டும். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது.
எனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு குடிமகன் என்ற முறையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளேன், இந்த வழக்கை தொடுக்க ஜெயலலிதாவுக்கு உறவினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தனது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து , ஜெயலலிதா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி ஏற்கனவே இப்பிரச்சினை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மனுதரார் தேவைப்பட்டால் விசாரணை ஆணையத்தை இரண்டு வாரத்தில் நாடலாம் என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.