மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தமிழக தலைவரும் பதமநாபபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான முகமது இஸ்மாயில் செவ்வாய்க்கிழமை இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மஜக பொதுச் செயலாளரும் நாகப்பட்டிணம் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிடோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதி, மத பேதமின்றி அரசியலுக்கு அபாற்பட்டு அனைவரின் என்பையும் மரியாடஹியும் பெற்றவராக முகமது இஸ்மாயில் இருந்தார்.
1927 ல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பீர்முஹம்மது என்பவருக்கு மகனாக பிறந்த முகமது இஸ்மாயில், பி,ஏ, ஹானர்ஸ் படிப்பினை சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 1951ல் முடித்துவிட்டு சட்டம் பயின்று 1955 ம் ஆண்டு எர்ணாகுளத்தில் வழக்கறிஞராக பதிவு செய்தார். முகமது இஸ்மாயில் 1956ம் ஆண்டு குளச்சல் நகராட்சி தலைவராகவும், 1980ம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்பு, 1967 ல் காங்கிரஸ் பேரியியகத்தின் தலைவராக மூன்றாண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். பெருந்தலைவர் காமராஜர் 1967ல் சட்டமன்ற தேர்தலில் விருதுநகரில் தோல்வியுற்றபிறகு மார்ஷல் நேசமணி மறைவுக்குப் பின் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதிக்கு 1969ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெருந்தலைவர் காமராஜரை வெற்றிபெற வைத்த குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் முகமது இஸ்மாயில் அறியப்பட்டார்.
மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, முகமது இஸ்மாயில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறுத்து, “கடந்த 2016 ஆண்டு நாகர்கோவிலில் பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைமையில் எனது தேர்தல் வெற்றியை சிறப்பிக்கும் வகையில் எனக்கு ஒரு பாராட்டு விழா தொண்டு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது.
அதில் பங்கேற்று வாழ்த்தி பேசிய அவர், பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அவரது மறைவு பொது வாழ்வில் கண்ணியமாக பயணிக்க விரும்பும் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இஸ்மாயில் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில், “எனது பேரன்புக்குரியவர் ,மதசார்பற்ற ஜனதாதளத்தின் தமிழ் மாநில தலைவர் பி.முகம்மது இஸ்மாயில் Ex.MLA அவர்கள் இன்று 17-11-2020, இரவு 9.45 மணியளவில் தனது சொந்த ஊர் கன்னியாகுமரிமாவட்டம்,தக்கலையில் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்.....
காமராஜர் நாகர்கோவில் தொகுதியில் நாடளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது இவருடன் பணி ஆற்றியது. ஸ்தாபன காங்கிரஸ் தளத்தில் இவருடன் நல்ல
தொடர்பும் நட்பும் 1975 வரை இருந்தது. பி. முகமது இஸ்மாயில் (P. Mohammad Ismail) முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1980 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1980-1984 ஆண்டுகளில் தமிழ்நாடு ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். 1980 களின் ஆரம்பத்தில் 9 ஜனதா கட்சி பாராளுமன்றக் குழு உறுப்பினர்களில் அவரும் ஒருவர் ஆவார். 1991 மற்றும் 1996 நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் நாகர்கோவில் தொகுதியிலிருந்து ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
2005 முதல் ஜனதா தள மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னர் 1984-89 இல் அவர் தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவராக இருந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.