அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய துரோகி என்று விமர்சித்த அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து வெளியெற்றப்பட்ட சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய துரோகி என்று விமர்சித்த அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடிதம் ஒன்று அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இன்று அக்டோபர் 28, மாலை 3 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வணக்கம், இஸ்லாமியர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த எடப்பாடி என்று குறிப்பிட்டு, ஆதாரத்துடன் வெளியிட உள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கழகத்தை விட்டு நீக்க சொல்லி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு கோரிக்கை வைத்து எனது பேட்டி அனைத்து பத்திரிகை நண்பர்களும் கலந்துகொண்டு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜெ.எம்.பஷீரின் இந்த கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான சில மணி நேரங்களில், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர் (அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர்) இன்ன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.