Kallakurichi to Become 33rd District of Tamil Nadu: விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி என்னும் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம், குமரகுரு எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று கவர்னர் உரை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, "விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் அது இரண்டாக பிரிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.
இதன் மூலம் தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் கடைசியாக கடந்த 2009 ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர், 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் மற்றொரு புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக உள்ளது.