Kallakurichi aiadmk mla prabhu marriage: கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, சாதி மறுப்புத் திருமணம் புரிந்திருக்கிறார். கல்லூரி மாணவியான கோவில் குருக்கள் மகளை அவர் மணந்தார். இதற்கு குருக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர், பிரபு. இவர் டிடிவி தினகரன் அணியில் இயங்கினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமரசம் செய்து கொண்டார். 38 வயதான பிரபு எம்.எல்.ஏ இன்று 19 வயது கல்லூரி மாணவியை காதல்- கலப்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமணம்
இவர் திருமணம் செய்து கொண்ட பெண், திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கிறார். இந்தப் பெண்ணின் தந்தை பெயர் சுவாமிநாதன், இவர் தியாகதுருகத்தில் ஒரு கோவிலில் குருக்களாக இருக்கிறார்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவாமிநாதன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ‘எனது குடும்பத்தினருடன் பிரபு எம்.எல்.ஏ, மகன் போல பழகி வந்தார். ஆனால் சுமார் 20 வயது வித்தியாசமுள்ள எனது மகளை இப்படி கடத்திச் செல்வார் என எதிர்பார்க்கவில்லை. நான் சாதி பார்க்கவில்லை. ஆனால் வயது வித்தியாசம் பார்க்க வேண்டுமல்லவா?’ என குமுறலாக பேசியிருக்கிறார் சுவாமிநாதன்.
பிரபு எம்.எல்.ஏ தரப்பில் முழுக்க அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்மணி புன்னகையுடன் திருமண நிகழ்வில் பங்கேற்ற படங்களும் வெளியிடப்பட்டன.
இதற்கிடையே பிரபு எம்.எல்.ஏ வீட்டின் முன்பு சென்று உயிரை மாய்க்கப் போவதாக கோவில் குருக்கள் சுவாமி நாதன் அறிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற அவரை போலீஸார் மீட்டு அழைத்துச் சென்றார்கள். இந்த விவகாரம் முதல்வர் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
சட்டரீதியாக அந்தப் பெண் மேஜர் என அறியப்படுவதாலும், அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் நடந்திருப்பதாலும் இதில் தவறு இல்லை என்றே எம்.எல்.ஏ தரப்பில் கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"