மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக ஜனவரி 26ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன்.
ட்விட்டரில் கருத்து மட்டுமே கூறிவந்த கமல்ஹாசன், சில மாதங்களுக்கு முன்பு திடீரென அரசியலில் இறங்கினார். மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக செயலி ஒன்றையும் தொடங்கிய கமல்ஹாசன், மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தன்னுடைய பிறந்த நாளன்று தெரிவித்தார் (இந்த செய்தியைப் படிக்க க்ளிக் செய்க).
கமல்ஹாசன் அறிவித்தபடியே, வருகிற 26ஆம் தேதி முதல் தன்னுடைய சுற்றுப் பயணத்தைத் தொடங்க இருக்கிறார். இதுபற்றி ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ விழாவில் அறிவித்த கமல்ஹாசன், வருகிற 18ஆம் தேதி வெளியாகும் ஆனந்த விகடன் இதழில் சுற்றுப் பயணத்தைப் பற்றிய விவரங்களை எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்தும் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்த சுற்றுப் பயணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.