முதல்முறையாக தனிக்கட்சி பற்றிய அறிவிப்பையும், அதை நடத்துவதற்கான பண வசூல், மற்றும் பதவி ஆசை பற்றி மனம் திறந்து ரசிகர்களிடம் கொட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், அரசியல் பேச ஆரம்பித்தபோது அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், இதற்கு முன்பு பலமுறை அரசியல் பற்றி பேச்சு எடுத்தாலே, எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் இறங்க விரும்பவில்லை என சொன்னவர்தான் அவர்.
கமல்ஹாசன் இந்த முறை ட்விட்டரில் அடுத்தடுத்து அதிமுக ஆட்சியாளர்களை வெளுத்துக் கட்டியபோது, அதனாலேயே பலரும் அவர் பொழுது போக்குக்காக பேசுவதாக குறிப்பிட்டனர். வேறு சிலர், பிக்பாஸ் விளம்பரத்திற்காக பரபரப்பை கூட்டுவதாக கருதினர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதால், அவருக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக கமல்ஹாசன் அரசியல் ஸ்டண்ட் அடிப்பதாக ஒரு கருத்தும் இருந்து வருகிறது.
கமல்ஹாசனும் அவரை யாரும் கணிக்க முடியாத அளவுக்கு குழப்பமாகவே கருத்துகளை கூறி வந்தார். நவம்பர் 7-ம் தேதி அவர் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக மீடியாவில் செய்தி வந்ததும், ‘ஊடகங்களின் உந்துதல் அடிப்படையில் நான் கட்சி ஆரம்பிக்க முடியாது’ என கூறினார். அதனாலேயே அவருக்கு தனிக்கட்சி திட்டம் இல்லை என்கிற கருத்துகள் முளைத்தன.
ஆனால் நவம்பர் 5-ம் தேதி (சனிக்கிழமை) சென்னை கேளம்பாக்கத்தில் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நடத்திய சந்திப்பில்தான் முதல்முறையாக மனம்திறந்து பல விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார் கமல்ஹாசன். அதில் முக்கியமானது, தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அவர் அறிவித்திருப்பது! அந்தக் கட்சிக்கு பண வசூல் எப்படி செய்ய இருக்கிறார்? கமல்ஹாசனுக்கு பதவி ஆசையா? என்பதற்கெல்லாம் பதில் கூறியிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் நறுக்கு தெறித்தார்போல கமல்ஹாசன் கூறிய 12 ‘நச்’ பாயிண்டுகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறோம்.
1. வரும் 7-ம் தேதி மொபைல் செயலியின் பெயரும், செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும்.
2. நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி.
3. நான் வள்ளல் கூட்டத்தை உருவாக்க முயன்று வருகிறேன்.
4. ஆர்வக்கோளாறில் பதவிக்காக அரசியலுக்கு வந்துவிட்டேன் என நினைக்க வேண்டாம்.
5. கட்சி தொடங்க ரசிகர்களிடம் பெறும் பணத்துக்கு கணக்கு வைக்க மொபைல் செயலி பயன்படுத்தப்படும்.
6.அடக்குமுறை என்பது அரசியலில் யதார்த்தமாகிவிட்டது. அதை தாங்கிக்கொள்ள தயாராகிவிட்டேன்.
7. எத்தனை பேர் மிரட்டுகிறார்கள்? எண்ணிக்கை முக்கியம் அல்ல. என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம்.
8. இயற்கையின் சீற்றத்துக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது.
9. தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை.
10. பணக்காரர்கள் வரியை செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும்.
11.சரித்திரத்தை திரும்பிப் பார்க்காமல் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து வருகிறோம்.
12. பேரழிவு வரும்வரை பொறுத்திருக்க வேண்டுமா? வருமுன் காக்க அனைவரும் முன்வர வேண்டும்.
ஆக, அனைவரையும் குழப்பிக்கொண்டிருந்த கமல்ஹாசன் தெளிவாக ஒரு முடிவு எடுத்துவிட்டதாகவே தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.