அன்புசெழியன் பெயரைச் சொல்லி கண்டிக்கவே சினிமா வி.ஐ.பி.க்கள் தயங்குவதும், பதறுவதும் அம்பலமாகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் அறிக்கைகளே அதற்கு சாட்சி!
அன்புசெழியனை, தமிழ் சினிமாவின் தாவூத் என வர்ணிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்! மதுரையில் சாதாரண லெவலில் கொடுக்கல்-வாங்கல் செய்துகொண்டிருந்தவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமா உலகினுள் புகுந்தார். அந்த நேரத்தில் வளர்ப்பு மகனாக பெயர் பெற்ற ஒருவரின் பணத்தை சினிமாத் துறையில் ஃபைனான்ஸாக இவர் விதைத்ததாக கூறப்பட்டது.
அரசியல் செல்வாக்கும் இருந்ததால், இவர் வைத்ததுதான் வட்டி என்றானது. மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளரான ஜி.வி. தற்கொலையின்போதுதான், அன்புசெழியனின் வட்டி பராக்கிரமங்கள் அம்பலத்திற்கு வந்தன. ஆனாலும் சினிமாத் துறையிலேயே தனக்கு ஆதரவான ஒரு வட்டத்தையும் எப்போதுமே அன்புசெழியன் உருவாக்கி வைத்திருக்கிறார்.
அதன் விளைவுதான் தயாரிப்பு நிர்வாகி அசோக் குமார் மரணத்திற்கு பிறகும், அன்புசெழியன் பெயரைச் சொல்லி கண்டிக்க பலரும் தயங்குவதற்கான காரணம்! அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது நவம்பர் 21-ம் தேதி! அன்றே அசோக் குமாரின் உறவினரும் இயக்குனருமான சசிகுமார், சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் அன்புசெழியன் மீது புகார் கொடுத்தார்.
அப்போது இயக்குனர்கள் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட வெகு சிலரே சசிகுமாருக்கு துணையாக நின்றார்கள். முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அதனால்தான் இயக்குனர் அமீர், ‘இதற்கெல்லாம் முடிவு கட்ட முடியவில்லை என்றால் சினிமா சார்ந்த சங்கங்களை மூடிவிட்டு போய்விடுங்கள்’ என கோபத்தில் கொந்தளித்தார். இதன்பிறகே தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஷால் அறிக்கை அன்று இரவு வந்தது.
இயக்குனர் சுசீந்திரன், ‘அல்டிமேட் ஸ்டார் அஜித்கூட அன்புசெழியனால் மிரட்டப்பட்ட வரலாறு இருக்கிறது. இதை அஜீத் மறுக்க மாட்டார்’ என்றார். அதேபோல அஜீத் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொண்டு அறிக்கை விடவும் இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘தளபதி’ பட்டம் போட்டுக்கொண்டிருக்கும் விஜய் என முக்கிய வி.ஐ.பி.க்கள் இதில் மெகா மெளனம் காக்கிறார்கள்.
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 23, 2017
அன்பு செழியன் பெயரை குறிப்பிட்டே பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்து, 40 மணி நேரம் கழித்து இன்று (23-ம் தேதி) கமல்ஹாசன் ‘ட்வீட்’ செய்திருக்கிறார். அதில், ‘கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.’ என பொத்தாம் பொதுவாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல நேற்று முன்தினம், விஷால் வெளியிட்ட அறிக்கையிலும் அன்புசெழியன் பெயரை தவிர்த்தார். ‘பணம் வாங்கினால், கொடுப்பதுதானே நியாயம்’ என அன்புசெழியனுக்கு ஆதரவாக வாதிடுகிறவர்களும் சினிமாத் துறையில் இருந்தே கிளம்பியிருப்பது இன்னும் அதிர்ச்சி!
ஒருவருடைய பணத் தேவையை மூலதனமாக்கி, விரும்பியபடி வட்டி வசூல் செய்வதை சட்டம் அனுமதிக்கவில்லை. அதிலும் சினிமாத் துறையில் கந்து வட்டியைக் கொடுக்க முடியாத தயாரிப்பாளர்களை சினிமா வில்லன்கள் பாணியிலேயே கொடூரமாக டார்ச்சர் செய்வதும், இதற்கு அதிகார, அரசியல் பலத்தை பயன்படுத்துவதும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை வேரறுக்க வெளிப்படையாக போராட கடந்த 15 ஆண்டுகளில் ஒரு ஹீரோ கூட தமிழ் சினிமாவில் தயாராக வில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.