நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்யும் விதமாக கடந்த சில நாட்களாக பேட்டி கொடுத்து வருகிறார். கடந்த 1-ம் தேதி சென்னை அடையாரில் நடைபெற்ற சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழாவில் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் கலந்துகொண்டனர். அதில் கமல்ஹாசனின் அரசியல் வருகையை உறுதி செய்கிற விதமாக ரஜினியே பேசினார்.
அதாவது, ‘சினிமா புகழ் மட்டுமே அரசியலில் ஜெயிக்க போதுமானதல்ல. அரசியலில் ஜெயிக்க தேவையான ரகசியம் எனக்கு தெரியாது. ஆனால் கமலுக்கு தெரிந்திருக்கலாம். இப்போது நான் கேட்டாலும் சொல்ல மாட்டார். ஒருவேளை இரு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கூறியிருப்பார்’ என குறிப்பிட்டார் ரஜினி.
ட்விட்டரில் மட்டுமே கமல்ஹாசன் அரசியல் நடத்தி வருவதாகவும் ஒரு விமர்சனம் இருக்கிறது. அதை தவிர்க்கும் விதமாக தனது அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவிருக்கிறார் கமல். அதன் தொடக்கம்தான் ரசிகர்களுடன் சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 4) பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனது பெயரிலான நற்பணி இயக்க நிர்வாகிகளை அழைத்துப் பேசினார் கமல்ஹாசன். காலை 10 மணிக்கு தொடங்கி இந்த ஆலோசனை நடந்து வருகிறது. கூட்டம் முடிந்தபிறகு வெளியே வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘கமல்ஹாசன் அரசியலுக்கு வர இருப்பதை இந்த சந்திப்பில் எங்களிடம் உறுதிப்படுத்தினார். நற்பணி இயக்கப் பணிகளை டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் வேகப்படுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினார்’ என குறிப்பிட்டனர்.