'மக்கள் நீதி மய்யம் ஸ்தாபனத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், "பெண்களின் ஓட்டுக்களை வாங்குவதற்காக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டுகிறீர்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது. அப்படி மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பெரிய கொலைகள் நடக்கும்.
மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி. குடிப்பதை குறைக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக குடியை நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
கிராம மேம்பாடே எங்கள் கொள்கை. அங்கே என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டைப் போன்று விவசாய மேம்பாட்டுக்கும் பல திட்டங்கள் வைத்துள்ளோம். கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னுக்கு இழுக்க வேண்டாம். மாணவர்களின் மூலம் தான் தமிழகம் மருத்துவத்தில் உயரிய தரத்தை அடைந்துள்ளது. அதுவும் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களே இங்கு வந்து வைத்தியம் பார்த்துச் செல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறோம். பிறகெதற்கு எங்கள் வருங்கால மருத்துவர்களைச் சோதிக்க நீட்? ஆம்! 'நீட்'டுக்கு ஆதரவு இல்லை என்பதே 'மக்கள் நீதி மய்யத்தின்' நிலைப்பாடு" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.