மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீடு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. தன்னை பார்க்க வருபவர்களை கமல்ஹாசன் இங்குதான் சந்திப்பார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் வீட்டிற்கு கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் சென்றுள்ளார். கமலின் ரசிகரான அவரிடம் கமல் வீட்டில் இல்லை எனவும், பார்க்க முடியாது எனவும் காவலாளி கூறியுள்ளார். இதையடுத்து அங்கேயே சிறிது நேரம் காத்திருந்த சபரிநாதன், காவலாளி இல்லாத நேரமாக பார்த்து, சுவர் ஏறி கமல் வீட்டின் வளாகத்திற்குள் குதித்துள்ளார்.
எனினும், வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர் திரும்பி வந்துவிட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் சபரிநாதனை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சபரிநாதனை கைது செய்யுமாறு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸாரின் விசாரணையில், சபரிநாதன் திருவல்லிக்கேணியில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.