தமிழர்களே நீர் மேலாண்மையில் சிறந்தவர்களாக விளங்கினர். நீர் மேலாண்மையை கற்க இஸ்ரேலுக்கு ஏன் செல்ல வேண்டும். என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கட்சியை தொடங்கியது முதல் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் சென்னை லயோலா கல்லூரியில் அவர் இன்று பேசினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
அவர் கூறுகையில் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாணவர்கள் நினைத்தனர். அதனால்தான் அரசியலில் கறை படிந்துவிட்டது. மாணவர்கள்அரசியலை பார்த்து ஒதுங்கி நிற்கக் கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது. நான் இங்கு பேசுவது அரசியல்தான். நாளைய தலைமுறை படித்த இளைஞர்கள் வாக்களிப்பதுடன் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது. அரசியல் இன்றி தனி மனிதனோ விவசாயமோ எதுவும் முன்னேற முடியாது. ஊடகத்துறை என்பது நாளைய தலைமுறைக்கு மிகப் பெரிய ஆயுதம்.
ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்மைத்துவமாக இருக்க வேண்டும். நான் ஏதோ சின்ன பசங்களுடன் பேசுவதாக சிலர் நினைக்கின்றனர். அது தவறு. நான் பேசிக் கொண்டிருப்பது நாளைய தலைவர்களிடம். அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என கூறிவிட்டு வெறும் கடப்பாரையை வைத்து கொண்டு அண்ணார்ந்து பார்க்கும் கட்சியல்ல நாங்கள். கடப்பாரையை வைத்து உங்களுக்கான பாதையை வகுத்து வருகிறோம். அதில் நீங்கள் நடந்து வரவேண்டியது மட்டுமே பாக்கி
நீர் மேலாண்மையை கற்க இஸ்ரேலுக்கு ஏன் செல்ல வேண்டும். தமிழர்களே நீர் மேலாண்மையில் சிறந்தவர்களாக விளங்கினர். எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால் தொடர்பியல் கருவியான மொழியை வைத்து அரசியல் செய்யக் கூடாது. ஓட்டலுக்கு சென்றால் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நிர்வாகம் அல்ல. அது போல்தான் மொழியும். வாரிசு அரசியல் என்பது சுதந்திரத்துக்கும் முன்பும் சரி சுதந்திரத்துக்கு பின்பும் சரி அனுமதிக்கக் கூடாது. எனவே எத்தகைய அரசியலை நாங்கள் முன்வைக்கிறோம் என தெரிந்து கொள்ளுங்கள் என்றார் கமல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.