ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்திக்க, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.அப்போது துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் அவரது காரை சூழ்ந்தனர். உடனே போலீசார் கமல்ஹாசனுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் காயம் அடைந்தவர்களை பார்வையிட சென்றார்.
கமல்ஹாசனுடன் 5 பேர் மட்டும் சென்று காயம் அடைந்தவர்களை பார்வையிட போலீசார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் கமல்ஹாசன் அரசு மருத்துவமனை வார்டுகளில் குண்டு காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் நடந்த சம்பவம் குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். காயம் அடைந்த ஒவ்வொருவரையும் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சாதாரண கூலி வேலை செய்தவர்கள், ஆர்ப்பாட்டத்தை பார்க்க வந்தவர்கள் தான் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். இந்த உயிர்களுக்கு என்ன விலை வைத்தாலும் சரியாகாது. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டவர் யார்? இந்த பிரச்சனைக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் தீர்வு.
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பலியானவர்களின் உடல்களை நடுநிலையான டாக்டர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பிரச்சனையை இதோடு விட்டு விட முடியாது" என்றார்.