காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் நீர் குறைக்கப்பட்டிருப்பது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், காவிரியை தனிப்பட்ட ஒரு மாநிலம் உரிமை கொண்டாட முடியாது என்பது வரவேற்கத்தக்கது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.
அதில், 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட 192 டி.எம்.சி. தண்ணீரில் 14 டி.எம்.சி. நீரை குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த 14 டி.எம்.சி. நீரை கர்நாடகாவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ”நாமெல்லாம் குரங்காக இருக்கும்போதுலிருந்து காவிரி ஓடிக்கொண்டிருந்தது. கிடைக்கும் தண்ணீரை பாசனத்திற்காக எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.”, என கூறினார்.
மேலும், ”வாக்கு வேட்டையில் காவிரி சர்ச்சையை தூண்டிவிட்டு தேசியம் மறந்து பேசுகிறார்கள். வாக்கு விளையாட்டு விளையாடுகிறேன் என்ற நோக்கில் சச்சரவை ஏற்படுத்திவிடக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு அழுத்தமாக உள்ளது சற்றே ஆறுதலாக இருக்கிறது.”, என கமல்ஹாசன் தெரிவித்தார்.
காவிரி வழக்கில் தீர்ப்பு குறித்து போராடுவது உதவாது எனவும், தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
”நிலத்தடி நீர் மட்டத்தை அரசு பாதுகாக்கவில்லை எனில் நாம் பாதுகாப்போம். வீடு பற்றி எரியும் போது பீடி பற்ற வைக்கின்ற வாக்கு விளையாட்டுகளால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்”, கமல்ஹாசன் கூறினார்.