பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட டிவி சீரியல் நடிகையான அனிகா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக அனிகா, அவருடைய கூட்டாளிகள் ரவீந்திரன், அனூப் ஆகியோரை பெங்களூரு போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைதான அனிகா கன்னடாவில் டிவி நடிகை என்றும் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், போலீஸ் விசாரணையில் அனிகாவைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போதை மாத்திரை விற்பனை வழக்கில் கைதாகியுள்ள சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் என்றும் அவர் ஏற்காட்டில் உள்ள கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்ததும் தெரியவந்துள்ளது. அனிகா, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு வேலை தேடி பெங்களூரு வந்து விடுதியில் தங்கி வேலை தேடியுள்ளார். வேலை கிடைக்காமல் இருந்த அனிகாவுக்கு சென்னையைச் சேர்ந்த ரவீந்திரன், கொச்சியை சேர்ந்த அனூப் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரவீந்திரனும் அனூப்பும் ஏற்கனவே போதை மருந்துகளை விற்பனை செய்துவந்தவர்கள் என்பதால், அனிகா அவர்களுடன் சேர்ந்துகொண்டு போதை மருந்துகளை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, போதை மருந்துகளை விற்பனை செய்துவந்த அனிகாவுக்கு பிரபல கன்னட நடிகையுடன் அறிமுகம் கிடைத்துள்ளது. அனிகா அவர் மூலம் டிவி சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.
அதோடு, அனிகா, சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி போதை பொருட்களை விற்பனை செய்து உள்ளார். அனிகா ரவீந்திரன், அனூப்பிடம் இருந்து போதை பொருட்களை வாங்கி பார்சல் செய்து அவற்றை வாடிக்கையாளரின் முகவரிகளுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இதனிடையே, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அனிகா, அங்கே அவருடன் வேலை செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஆன்டி ஜம்போவை காதலித்து வந்துள்ளார். பின்னர் 2 பேரும் திருமணம் செய்துகொண்டு உள்ளனர்.
நைஜீரியாவைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ சில மாதங்களுக்கு முன்புதான் போலீசாரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அனிகாவுக்கு நைஜீரியா நாட்டை சேர்ந்த சிலருடன் தொடர்பும் கிடைத்துள்ளது.
அனிதா போதை மாத்திரைகளை பெரும்பாலும் அவர் டார்க்வெப் இணையதளம் மூலம் ஆர்டர் செய்து வாங்கி விற்பனை செய்துள்ளார் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையெல்லாவற்றையும்விட போலீசாரின் விசாரணையில், அனிகாவுக்கு பெங்களூருவில் போதை பொருட்கள் விற்பனை செய்யும் 18 கும்பல்களுடன் தொடர்பு இருந்தது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, அனிகா கன்னட சினிமா நடிகர்கள் நடிகைகளுக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அனிகா போதை மாத்திரைகளை விற்பனை செய்ய அவர் சினிமாத் துறையினர் யாரையும் நேரில் சந்திக்காமல் வேறு நபர்கள் மூலம் போதை மாத்திரைகளை வினியோகம் செய்தார் என்று கூறப்படுகிறது.
போதை மாத்திரை வழக்கில் கைதாகியுள்ள நடிகை அனிகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், மேலும் பல திடுக்கிடும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் அவரிடட்ம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில்தான், கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனர் இந்திரஜித் லங்கேஸ், கன்னட நடிகர்கள், நடிகைகளிடம் போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.