கன்னியாகுமரி அரசு மருத்துவமனை அம்மா உணவக சாம்பாரில் இலவச இணைப்பாக பல்லி கிடந்ததால், அதை சாப்பிட்ட பெண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இருந்தும், திருநெல்வேலி மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த ஏஞ்சல் (வயது 28) உடல்நலம் பாதித்த தனது தாய் அமலாவை இங்கு அனுமதித்திருக்கிறார். அதே மருத்துவமனை வளாகத்தில் அரசுக்கு சொந்தமான அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கி இவர் சாப்பிட்டார். அப்போது சாம்பாரில் பல்லி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சற்று நேரத்தில் அவருக்கு தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டது. உடனே அதே மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அவர் யாரிடமும் புகார் அளிக்கவில்லை. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும், அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அம்மா உணவகத்தில் இருந்த மதிய உணவை மாதிரி எடுத்து, பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து கிடைக்கும் ‘ரிப்போர்ட்’டில் உணவின் தன்மை தெரியவரும். கவனக் குறைவாக இருந்த அம்மா உணவ ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.