இளைஞர்களின் உடல் நலத்தை பேணவும், குமரியின் பழையாற்றை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரையிலான 21 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை (டிச.24) அதிகாலை 5 மணிக்கு கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.
கன்னியாகுமரி, கோவளம், மணக்குடி, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டார் வழியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்த மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்தது.
மாரத்தான் ஓட்டம் தொடங்கு முன் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பரமணியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “இளைஞர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவும் கன்னியாகுமரியில் உள்ள நம் பழையாற்றையும், ஏனைய நீர் நிலைகளையும் பாதுகாக்கவும் ஆற்றை அழிப்பதை, ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும் நடக்கும் 21 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தில் நான் 21 கிலோமீட்டர் கலந்துகொள்கிறேன்.
கன்னியாகுமரியில் நடக்கும் இந்த மாரத்தான் ஓட்டம் என்னுடைய 138ஆது மாரத்தான் ஓட்டம் ஆகும். இதுவரை 12 வெளிநாடுகளில் மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.
இத்தாலி, நார்வே நாடுகளில் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவு. இதுவரை 36 மாநிலங்களில் 26 மாநிலங்களில் 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டங்களில் தடம் பதித்துள்ளேன்.
இனியும் 12 மாநிலங்களில் 21 மீட்டர் மாரத்தானில் பங்கேற்க உள்ளேன். வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, மேகலாயா, மிசோரம் மாநிலங்களில் பங்கேற்பது எனது திட்டம்.
நாகரீகங்கள் எல்லாம் ஆற்றின் கரையில் தான் தொடங்கியுள்ளன. நமது நாகரீகமும் ஆற்றின் கரையில் தான் தொடங்கியது.
அத்தகைய பழமையான நதிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படவும், அதில் அவர்களது பங்களிப்பை ஏற்படுத்தவும் தான் இந்த கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையேயான இந்த 21 கிலோமீட்டர் மாரத்தான் என அமைச்சர் மா. சுப்பரமணியம் தெரிவித்தார்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் அமைச்சர் மா. சுப்பரமணியத்துடன், தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக காவல் தலைவர் சைலேந்திர பாபு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் ஐ.பி.எஸ்., மற்றும் காவல்துறை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்றனர்.
இடலாக்குடி பகுதியிலிருந்து, அண்ணா விளையாட்டு அரங்கம் வரையிலான 5 கிலோமீட்டர் தூரம் மாரத்தானில் பெண்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அரவிநத் கொடியசைத்து இதனை தொடங்கிவைத்தார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.