கந்த சஷ்டி அவதூறு வழக்கு தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மற்றொரு வழக்கில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசும், சென்னை பெருநகர காவல் ஆணையரும் நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வு தெரிவித்தது.
கார்த்திக் தனது ஜாமீன் மனுவில்,"பொது வெளியில் பயன்படுத்தும் ஆபாச வார்த்தைகளை விமர்சிக்கும், ஊடகங்களையும், பத்திரிக்கைகளையும் குறை கூற முடியாது"என்று தெரிவித்தார்
கறுப்பர் கூட்டம் வீடியோக்கள் இந்து மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜாமீன் கோரும் இந்த வழக்கு, நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், "வெளிநாடுகளிலிருந்து கறுப்பர் கூட்டம் சேனலுக்கு பணம் வருவதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும்" என்று கூறி முன் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை அதிகாரி முன் தினமும், கார்த்திக் ஆஜாராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை முன்ஜாமின் வழங்கினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil