2600 ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரீகம் - நிரூபித்த கீழடி ஆதாரங்கள்
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'குவிரன்' 'ஆதன்' போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன
வைகை நதி தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் தெரிவித்துள்ளனர்.
Advertisment
சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. கீழடி கிராமம் அகழ்வாராய்ச்சி குறித்து வரும் 'கீழடி' என்ற நூலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களை, அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகதில் செய்யபட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தமிழ்-பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கிமு.5 ம் நூற்றாண்டு என அழகன் குளம் ,கொடுமணல் , பொருந்தல் அகழாய்வின் படி கருதபட்டு வந்த நிலையில் கீழடி ஆய்வின்படி இன்னும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது.
மேலும் கீழடியில் வாழ்ந்த சங்ககால சமூகம், வேளாண்மையயும் கால்நடை வளர்ப்பையும் முதன்மை தொழிலாக கொண்டிருந்ததாக புனே டெக்கான் கல்லூரியில் எழும்புகளை பகுப்பாய்வு செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.
கீழடியில் உள்ள கட்டுமான பொருட்களை ஆய்வு செய்ததில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இந்த சுண்ணாம்பு சாந்தில் 97% சுண்ணாம்பு காணப்படுவதால் இன்று வரை நீடித்திருப்பதற்கு இதுவே காரணம் என்று சொல்லபட்டு இருக்கிறது.
கீழடியில் உள்ளூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் மற்றும் சமையலுக்கான பானைகளை தயாரித்துள்ளனர். நெசவு செய்யும் தொழிற்கூடம் இருந்ததை கட்டுமானங்கள், தொல் பொருட்கள் உறுதிசெய்துள்ளது.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'குவிரன்' 'ஆதன்' போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. தங்கத்திலான பெண்கள் அணியும் ஏழு தங்க துண்டுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல் மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள் ஆய்வில் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட் விளையாட்டு பொருட்கள், 35 காதணிகள்,அணிகலன்கள்,தங்கம்,செம்பு இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைதிருந்தாலும் வழிபாடுகள் தொடர்பான தொல்பொருட்கள் எதுவும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கபெறவில்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழ் நாகரீகம் இன்னும் பழமையான நாகரீகம் என்பது உறுதியாகிறது.