நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜக-வில் இணைவதாக, நேற்று முதல் அரசியல் களத்தில் அனல் பறக்கின்றன.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் குஷ்பு. அதில், “காங்கிரஸில் செய்தி தொடர்பாளராக பணியாற்ற வாய்ப்பளித்த, தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு நன்றி. பெயர், புகழ் அல்லது மற்ற எந்த விஷயத்திற்காகவும், நான் இங்கு வரவில்லை. கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் என்னை அடக்கி வைத்தனர். மக்களால் அங்கீகரிக்கப்படாத தலைவர்கள் சிலர், என்னை போன்றவர்களை அடக்கி, ஒடுக்கினர். அதனால் மிகவும் ஆழ்ந்து யோசித்து, காங்கிரஸ் உடனான எனது இணைப்பை முடித்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இதனை எனது பணி விடுப்பு கடிதமாக ஏற்றுக் கொள்ளவும். ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை தொடரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வில் இன்று இணைய இருக்கிறார் என்றும் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை இன்று சந்திக்கிறார் என்றும் தகவல் வெளியாகியிருக்கின்றன. அதோடு கணவர் சுந்தர் சி-யுடன், குஷ்பு டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”