Advertisment

கோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை!

தேர்தல் பிரச்சாரம் முடிய இருப்பதால் இந்த விவகாரத்தை இனி பேசப் போவதில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோடநாடு

கோடநாடு

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் இருவரும் பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு தோட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

அதன்பின்னரும் கோடநாடு சம்பவம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இதுபோல் தொடர்ந்து பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுடன், தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என நீதிபதி ஜி.கே.இளந்திரையன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசி வருவதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டுமெனவும், நீதிமன்ற வாய்மொழி உத்தரவை தொடர்ந்து மீறுவதால் அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரும் மனு மற்றும் ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ. நடராஜன், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தொடர்ந்து கோடநாடு சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் பேசிவருவதாக தெரிவித்தார். மேலும் நேற்று முன் தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் அவர் பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்தார். இந்த வீடியோ நீதிபதி நீதிமன்றத்தில் பார்த்தார்.

பின்னர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, கடந்த விசாரணையின் போது இந்ந விவகாரம் தொடர்பாக பேசக்கூடாது என தெரிவித்து இருந்தேன். தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது எப்படி பேச முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் பிரச்சாரம் முடிய இருப்பதால் இந்த விவகாரத்தை இனி பேசப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதி, கோடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் பேசக் கூடாது எனவும் கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த சம்பவம் குறித்து பேசக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார். பிரதான வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தார்.

Chennai High Court Kodanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment