அனைத்து ஜமாத் கூட்டமைப்புகள் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவையைச் சேர்ந்த அனைத்து ஜமாத் கூட்டமைப்புகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவையில் கடந்த 23 ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியதாவது : கோவையில் கடந்த 23 ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஜமாத் கூட்டமைப்புகளும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் இதுபோன்ற அசாதாரண சூழல்களில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பது குறித்து விளக்கப்பட்டது.
மேலும் இது போன்ற சம்பவங்களின் விளைவுகள் குறித்து எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டோம். நீண்ட கால அடிப்படையில் மத நல்லிணக்கத்திற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக இதுபோன்ற கூட்டத்தை நடத்துகிறோம். கடந்த மாதம் இரண்டு முறை மத நல்லிணக்க அடிப்படையிலான கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இது போன்ற குற்ற செயல்கள் நடப்பதற்கு முன் தகவல் அளிப்பது குறித்து எடுத்துரைத்தோம். அவர்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனரகோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை