Krishna Janmashtami wishes: கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 11 கொண்டாடப்படுவதையொட்டி அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்தனர். கீதையின் உபதேசத்தை வாழ்வில் பின்பற்றுவோம் என குறிப்பிட்டனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ண கோலங்களிட்டு வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளால் ஆன தோரணங்களை கட்டி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து குழந்தைகளை கண்ணனை போல் அலங்கரித்து குழந்தைகளின் பாத சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து அந்த குழந்தை கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்குள் வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும் அற செயல்களை மென்மேலும் வளர்த்து தீமைகள் அகற்றி நன்மைகள் பெருக செய்து உலகில் அமைதியையும், மகிழ்ச்சியையும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்ற எங்களது விருப்பத்தினை தெரிவித்து அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் மீண்டும் ஒரு முறை எங்களது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறோம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"