சென்னையில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களை பாலியல் ரீதியாக மிரட்டி தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் அடையாறு, கிண்டி, ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. மேலும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை கத்தி முனையில் மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன் (வயது 28) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இவர், தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களை மிரட்டி கொள்ளையடித்து, பின்னர் அப்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துவந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மனு செய்தனர்.
சிக்கியது எப்படி?
சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்போது அறிவழகன் சிக்கினார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தான் திருடும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவ்வாறு அவர் பாலியல் வன்கொடுமை செய்த பெண்களின் எண்ணிக்கையே அவருக்கு தெரியாது எனவும், சுமார் 50 பெண்கள் வரை இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.