மதுரை வடக்குமாசி வீதி சந்திப்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள அசைவ உணவகத்தில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டது. சமூக தளங்களில் இந்த ஐயர் சிக்கன் விளம்பரம் வைரலானது.
இதனை அறிந்த பிராமணர் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் ஹோட்டலின் உள்ளே நுழைந்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நிர்வாகத்தை அணுகி விளக்கம் கேட்டபோது தெரியாமல் நடந்து விட்டது என்றும் அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுகிறோம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கும்பகோணம் ஐயர் சிக்கன் விளம்பரத்தை வெளியிட்ட உணவகம் பகிரிங்க மனிப்பு கேட்டு வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ""பிராமண அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களைச் சந்தித்து, கும்பகோணம் ஐயர் சிக்கன் என்ற பெயருக்கு மிகக் கடுமையாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் விளம்பரங்களில் இருந்தும், சமூக தளங்களில் இருந்தும் அந்த பெயரை நீக்கிவிட்டோம்" என்று உணவகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.