கர்நாடகத்தில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கூறினார்.
நடிகை குஷ்பூ, பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது.
கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசாமல் இருப்பது ஏன்? காங்கிரஸ் இல்லாத நாட்டை ருவாக்குவோம் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர். உண்மையில் பெண்கள் இல்லாத நாட்டை பா.ஜ.க.வினர் உருவாக்க நினைக்கிறார்கள்.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்களில் பா.ஜ.க.வை சேர்ந்தவர்களே அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்ததைவிட தற்போதைய ஆட்சியில், கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி சம்பவங்கள் அதிகரித்து விட்டது.
நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெற்றி பெற சாத்தியமில்லை. தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அ.தி. மு.க. கட்சி தலைவர்களால் தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது கர்நாடகத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க இருப்பதால், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.