உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து, தினம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்த பின் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ அளித்த பேட்டியில், "கருணாநிதி என்றைக்குமே ஒரு போராளியாக இருந்திருக்கிறார். இன்றும் அவர் ஒரு போராளியாக இருக்கிறார். கருணாநிதி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி மீண்டும், 'உயிரினும் மேலான உடன் பிறப்புகளே' என கோடிக்கணக்கான தொண்டர்களை பார்த்து பேசுவார் என்று நம்புகிறேன். காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் நல்லபடியாக அவரை கவனித்து வருகிறார்கள். இவரைப் போன்ற தலைவர் நம் எல்லோருக்கும் தேவை" என கூறினார்
இதைத் தொடர்ந்து, நடிகர் விஜயகுமார் காவேரி மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்த பின் அளித்த பேட்டியில், "கருணாநிதி நூறாண்டுகாலம் வாழ்வார். அந்த மன உறுதி அவரிடம் இருக்கிறது. கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஸ்டாலினும், அழகிரியும் சொன்னார்கள். பொதுமக்களும், தொண்டர்களும் பயப்பட வேண்டாம்" என கூறினார்.
அதேபோல், கருணாநிதியின் உடல்நிலை பற்றி மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் விசாரித்தார். பின்னர், 'திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன்' என்று கூறினார்.
மேலும், கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காவேரி மருத்துவமனை வருகை தந்தார்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்....