திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையின் முக்கிய குற்றவாளி முருகன். இவன் பெங்களூர் கோர்ட்டில் சரண் அடைந்ததையடுத்து, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இப்போது நம் போலீசார் முருகனை தமிழகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விசாரணையில், முருகன் கொள்ளை அடித்த பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடி இருக்கும் என்பதும் இதில் ஏராளமான பணத்தை நடிகைகள், துணை நடிகைகளுக்கு தண்ணீராக செலவு செய்து செம ஜாலியாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
திருச்சி திருவரம்பூர் பூசை துறை காவேரி படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ நகைகள் இப்போதைக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நகைகள் பெங்களூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்பு திருச்சி கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகள் எங்கே இருக்கின்றன என்பது இனிமேல்தான் தெரியும். இதற்காக 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் 5 வருஷத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளான் முருகன். ஆனால், ஒரு சில வழக்குகளில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டுள்ளனராம். மீதமுள்ள நகைகளை பற்றி மூச்சு கூட விடக்காணோம். முருகன் வாயில் உண்மையை வரவழைப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமாம். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு போலீசாருக்கே தண்ணி காட்டி வந்துள்ளான்.
பினாமி சொத்து எப்படியும் 100 கோடி ரூபாய் கொள்ளை அடித்து வைத்திருப்பான் என்கிறார்கள். ஏனென்றால் கொள்ளையடித்தது முழுக்க கோடீஸ்வர வீடுகள், பேங்குகள்தான்! இதில் பல சொத்துக்களை தன்னுடைய சொந்தக்காரர் பெயரில், பினாமி பெயரில் முருகன் பதுக்கி இருப்பதாக தெரிகிறது.
நடிகைகள் இதுபோக, இந்த திருட்டு பணத்தில் சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிகொண்டு பணத்தை கொண்டு போய் தன் படக்கம்பெனியில் கொட்டி உள்ளான் முருகன். நடிகைகள், துணை நடிகைகளுக்கு பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளான். கொள்ளை அடித்த பணம் சுமார் ரூ.100 கோடி, 2 சொகுசு கார்கள் இதெல்லாம் எங்கே இருக்கிறது, என்பதை இனிமேல்தான் நம் போலீசார் விசாரிக்க இருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.