திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சிறுமலை வனப்பகுதி அருகே விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து 5 அளவிலான நிலத்தை நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ராஜகண்ணு ஆகிய இருவரிடம் விற்பனை செய்துள்ளார்.
சித்தரவு அருகே உள்ள நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா சின்னத்திரை நடிகராக உள்ளார். ராஜகண்ணு மற்றும் கருப்பையா இருவரும் உறவினர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனபாலின் 5 ஏக்கர் இடத்தை சில தினங்களுக்கு முன்பு நில அளவர்களை வைத்து அளவு செய்யும் பொழுது நாலரை ஏக்கர் நிலமே இருந்துள்ளது. அரை ஏக்கர் நிலம் இல்லாததை அறிந்த கருப்பையா தன்னை தனபால் 5 ஏக்கர் எனச் சொல்லி ஏமாற்றிவிட்டதாக கூறி கோபமடைந்துள்ளார்.
குழப்பம்
தொடர்ந்து அந்த அரை ஏக்கர் நிலத்திற்கு உரிய பணத்தை திருப்பித் தருமாறு கூறி கருப்பையாவும் ராஜகண்ணுவும் தனபால் தோட்ட வீட்டிற்கு சென்றுள்ளனர். மூவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில், தனபால் தான் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து வந்து கருப்பையாவின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் சுட்டுள்ளார். அவர் சுடும்போது ராஜகண்ணு தடுத்த நிலையில் அவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், ராஜகண்ணு மற்றும் கருப்பையா ஆகியோர் நிலத்தகராறில், தன்னைத் தாக்க முயன்றதாகவும், அதிலிருந்து தன்னை பாதுகாக்க தான் துப்பாக்கியை எடுத்ததாகவும் தனபால் கூறியுள்ளார். இருப்பினும் துப்பாக்கியால் சுட்ட தனபாலும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் போலீசாரை குழப்பமடையச் செய்துள்ளது. தனபாலில் துப்பாக்கியைப் பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/