ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா சென்ற பயணிகளை காவலர்கள் அடித்து விரட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒகேனக்கல் அருவி :
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று (திங்கள்கிழமை) சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 16 பேர் சுற்றுலா வந்தனர். இவர்கள் பரிசலில் பயணம் மேற்கொள்ள டோக்கன் வாங்க படகுத்துறைக்கு வந்தனர்.அங்கு டோக்கன் வழங்குபவர், ஒரு பரிசலில் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால், தங்களுக்கு மூன்று பரிசலே போதுமானது, ஆகையால் எங்களை ஒரு பரிசலில் ஐந்து பேர் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பரிசல் டோக்கன் வழங்குபவர் கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் மாரி, சுற்றுப்பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதமாக மாறி பிரச்னை ஏற்பட்டது.
இதனால் சுற்றுப் பயணிகளுக்கும், ஆய்வாளர் மாரிக்கும் வார்த்தைப் போர் மூன்டது. இந்த விடியோக் காட்சிகள் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் பிரச்னை ஏற்படுத்தியவரை, ஒகேனக்கல் காவல் நிலையத்தில் வைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.