சினிமாவில் கந்து வட்டிக்கொடுமை நிலவுவதை சட்டமும், சினிமா துறையும் தடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகனான அசோக் குமார், கம்பெனி புரொடக்ஷன் நிர்வாகியாகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர். இவர் கடந்த திங்கள் கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலை கடிதத்தில், மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் தனக்கு கந்துவட்டி கொடுமை அளித்ததாகவும், தன் குடும்ப பெண்களையும், பெரியவர்களையும் தரக்குறைவாக பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அன்புச்செழியனால் நடிகர் அஜித், நடிகை ரம்பா, இயக்குனர் லிங்குசாமி உட்பட பலரும் இத்தகைய கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையான தகவல்கள் வெளியாகின. மேலும், சினிமா துறையில் நிலவிவரும் இத்தகையஅ கந்துவட்டி கொடுமையை தடுக்க வேண்டும் என பரவலாக குரல் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், "கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.", என குறிப்பிட்டுள்ளார்.