சேகர் ரெட்டியிடமிருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படும் டைரி குறிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, மணல் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், பல கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சேகர் ரெட்டி கடந்தாண்டு ஆகஸ்டு 24 முதல் 31-ஆம் தேதி வரை எழுதியதாக கூறப்படும் டைரி குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றின் நகல்கள் தான் இவை.
இவற்றில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் பலரின் பெயர்கள் கோட் வார்டு மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கிய பணத்தின் மதிப்பும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த டைரியிலிருப்பது தன் கையெழுத்தல்ல என, சேகர் ரெட்டி மறுத்துள்ளார்.
இதனிடையே அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.