மேட்டுப்பாளையம்: கன்றுக் குட்டியை வேட்டையாடிய சிறுத்தை; அதிகாரிகள் உஷார் ஆவார்களா?
மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை கன்றுக்குட்டியை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை முத்துக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சப் கவுடர் மகன் கிருஷ்ணசாமி (60) இவர் முத்துக் கல்லூர் பகுதியில் 4 ஏக்கரில் நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
Advertisment
இவரது தோட்டத்தில் மாடு மற்றும் கன்று குட்டியை கட்டி வைத்துவிட்டு செல்வது வழக்கம். இதே போல் நேற்றும் மாடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் தோட்டத்திற்கு செல்லும் போது மாடுகள் சத்தமிட்டுள்ளது.
இதனால், டார்ச் லைட் அடித்து பார்க்கும்போது அங்கு சிறுத்தை ஒன்று கன்று குட்டியை கடித்து கொன்றது தெரிய வந்தது.
இதை அடுத்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் வனத்துறையினர் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினர் மீது புகார் கூறுகின்றனர். மேலும், சிறுத்தை கன்றுக்குட்டியைக் கடித்து கொன்ற சம்பவத்துக்கு பிறகாவது வனத்துறையினர் உஷாராகி விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"