எல்.ஜி.பி.டி.க்யூ பிரிவினரை மரியாதை ரீதியாக குறிப்பிடும் சொல்லகராதியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அகராதியில் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட வார்தைகளையே இப்பிரிவினரை குறிப்பிட பயன்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமூகத்தினரை உரிமைகள் பாதுகாப்பு, ஊடங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது. எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ.ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை 4 வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 25ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வெளியான அறிவிப்பாணையை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த சொல்லகராதியில் முன்றாம் பாலினத்தவர்களை மருவிய, மாறிய பாலினத்தவர் என்றும் திருநங்கை, திருநம்பி என்று இடத்திற்கு ஏற்றவாறு அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
gay- தன்பாலீர்ப்பு ஆண், lesbian-தன்பாலீர்ப்பு பெண், bisexual-இரு பாலீர்ப்புடைய நபர், queer – பால்பதுமையர் என்று அழைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த விதிகளை சட்டத்துறை ஒப்புதல் பெற்று, உத்தரவுக்காக முதலமைச்சர் முன்பு சமர்பிக்க உள்ளதால், விதிகளை இறுதி செய்து அரசு தரப்பில் அறிவிக்க 6 மாத காலம் அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும் முன்றாம் பாலினத்தவர்கள் கொள்கை வகுக்கவும் 6 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே ஓராண்டு கடந்த நிலையில் கூடுதல் அவகாசம் கேட்டக்கப்பட்டதால், அதிருப்தியை நீதிபதி தெரிவித்தார். மேலும் கொள்கை வகுக்கும் நடைமுறைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகின்ற செப்.2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.