உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், ஆணைய செயலாளர் வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு (2017) நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு எதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரசிம்மா, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதற்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தான் காரணம். உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முதல்நாள் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் தான், அதை பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
வேண்டுமென்றே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டு தவறானது எனவும் சட்டத்தை அமல்படுத்தி அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றிய பிறகு தேர்தல் நடத்தபடும் என்றும் தெரிவித்தார்.
அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் இதற்கு சம்பந்தப்பட்ட துறையை மட்டும் குறை சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள், அன்று மாநில தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.