ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறிப்பிட்டு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலும் 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தலும் அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்த 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் தங்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும், வாக்குச்சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது: ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, தபால் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, தேசிய மக்கள் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய-மாநில அரசு, மத்திய-மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வாக்காளர்கள் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
அதனால், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் மற்ற இடங்களில் நடைபெறும் தற்செயல் தேர்தல்களிலும் வாக்காளர்கள் மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.