சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை வரும் 10ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டது. தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்த தளர்வில், ஊராட்சி பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு இன்று சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.10,000 ஆண்டு வருமானம் உள்ள சிறிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தளங்களை பொதுமக்கள் தரிசனத்துக்கு திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும் நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த்தொற்றின் போக்கு தொடர்ந்து கணிக்கப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் நோய்த்தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தளங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்களின் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை (Standard Operative Procdures) பின்பற்றி தற்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும் தேவாலயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. செனை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற வேண்டும்.
அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடை முறைகளை பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.