குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை : வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.
இதனால் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வடமேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் இதர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம்.சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை இருக்கும். கடந்த 24 மணநேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பொள்ளாச்சியில் 10 செ.மீ மழையும், சின்ன கல்லாரில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது