Loyola College art-exhibition stirs up controversy- 94-வருட பாரம்பரியம் மிக்க லயோலா கல்லூரி வளாகத்தில் நடந்த ஓவிய கண்காட்சி சர்ச்சையில் சிக்கியது. பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஓவியங்கள் இதில் இடம் பெற்றதால் இந்துத்வ அமைப்பினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகம் மீதும், இதை நடத்திய அமைப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
சென்னை லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மய்யம் இணைந்து நாட்டுப்புற கலைஞர்களின் கருத்துரிமைகளை நிலைநாட்ட 6-ம் ஆண்டு வீதி விருது விழாவை நடத்தியது. 5௦௦௦க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவை ஒட்டி ஓவிய கண்காட்சியும் நடைபெற்றது. சாதி வன்முறை, பாலிய வன்முறை போன்ற பல தலைப்புகளில் ஓவியங்கள் வைக்கப்பட்டன. சமுக ஆர்வலர்களை ஆளும் பாஜக அரசு எப்படி நசுக்குகின்றது என்பதனை விளக்குவது போன்ற படங்களும் இடம் பெற்று இருந்தன.
பாரத தாயை இழிவு படுத்தும் நோக்கில் இடம் பெற்றதாக ஒரு ஓவியத்தால் சர்ச்சை வெடித்தது. அந்த ஓவியத்தில் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று வாசகத்துடன் #Metoo ஹாஷ்டாக் இடம் பெற்று இருந்தது. இது பாஜக மற்றும் இந்து அமைப்பு ஆதரவாளர்களை கடும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கியது.
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெட்ச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கல்லூரி நிர்வாகத்தை கடுமையாக சாடினார்.
,
சென்னை லயோலா கிறித்துவக் கல்லூரியில் கல்லூரியில் வி.சி.க,கம்யூனிஸ்ட், நக்ஸல் கிறித்தவ மதமாற்றம் செய்யும் தீயசக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து திட்டமிட்ட விதத்தில் இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இன்று காவல்துறையில் நேரில் புகார் அளிக்கப்பட்டது உள்ளது
— H Raja (@HRajaBJP) January 21, 2019
தனது ஆதரவாளர்களுடன், இன்று காலை சென்னை டி ஜி பி அலுவலகத்திற்கு வந்த அவர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தனது கண்டனத்தை தெரிவித்தார். பாரதமாதாவை #MeToo என குறிப்பிட்டு ஓவியம் வரைந்ததை கண்டு ரத்தம் கொதிக்கிறது. இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
விஷயம் பெரிதாகி கொண்டே போக, லயோலா கல்லூரி நிர்வாககம் பாஜக கோரிக்கையை ஏற்று மன்னிப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தாங்கள் தவறு செய்து விட்டோம் என்றும் சர்ச்சைக்குரிய ஓவியங்களை தங்கள் கல்லூரியில் இருந்து அகற்றி விட்டோம் என்றும் அந்த அறிகையில் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.