ஜெயலலிதா தொகுதியை அதிமுக-வினர் கண்டுகொள்ளவில்லை என்பதையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசார வியூகமாக மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கிறார்.
ஜெயலலிதா ஜெயித்த ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. போலி வாக்காளர்கள், கடந்த முறை நடந்த பண வினியோகம் தொடர்பாக நடவடிக்கை இன்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இங்கு தேர்தலை தள்ளி வைக்கும் முயற்சிகளில் திமுக இறங்கியிருக்கிறது.
ஒருவேளை அது நடக்காத பட்சத்தில் தேர்தலை எதிர்கொள்ளவும் திமுக தன்னை தயார்படுத்தி வருகிறது. இதன் அடையாளம்தான் தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 27) ஆர்.கே.நகரில் நடத்திய விசிட்!
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் தூர்வாரப்படாத இணைப்பு கால்வாயை பார்வையிட்டார். தண்டையார்பேட்டை நேரு நகரில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஐ.ஓ.சி. பஸ் நிலையம், வ.உ.சி. நகர் பூங்கா எதிரில் உள்ள குப்பை கிடங்கு, எண்ணூர் நெடுஞ்சாலையில் தூர்வாரப்படாமல் உள்ள மழை நீர் கால்வாய் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
பிறகு மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : வார்தா புயல், டிசம்பர் மாத வெள்ளம் ஆகியவற்றில் சென்னை எப்படி பாதிக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆட்சியை பொறுத்த வரையில் நிச்சயமாக எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காது. அரசை நம்பாமல் தி.மு.க.வினர் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
அரசியல் நோக்கத்தோடு நான் தவறான பிரசாரம் செய்வதாக அமைச்சர் உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா ஏற்கனவே போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று அனைத்து இடங்களையும் பார்வையிட்டேன். இங்கு கால்வாய் எப்படி இருக்கிறது? அதனால் கொசு எப்படி உற்பத்தியாகிறது? டெங்கு எப்படி உருவாகிறது? என்பதை அனைவரும் பார்த்தீர்கள். குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் கழிவுநீர் கலந்து வருகிறது.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இந்த தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் விட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது.110 என்கிற விதியை பயன்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டு மக்களை எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ அதே போல் தான் மழை வெள்ளத்தை பொருத்த வரையில் முன் எச்சரிக்கை எடுத்திருக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள தி.மு.க.வினர் சுத்தம் செய்கிற பணிகளில் முடிந்தவரை ஈடுபட இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதா ஜெயித்த தொகுதியை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்கிற ரீதியான பிரசாரத்தை ஆர்.கே.நகரில் ஸ்டாலின் ஆரம்பித்துவிட்டதுபோலவே அவரது இந்த திடீர் விசிட் அமைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.