கல்லீரல் தானம் பெற ம.நடராஜன் காத்திருக்கிறார். விரைவில் கல்லீரல் கிடைப்பதைப் பொறுத்தே அவரது உடல்நிலை மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர், அந்த அறிமுகம் காரணமாக அரசு செய்தித்துறையில் பி.ஆர்.ஓ.வாக இணைந்தவர் ம.நடராஜன். இவருக்கும் சசிகலாவுக்கும் இடையிலான திருமணம், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. சசிகலா - ஜெயலலிதா நட்புக்கு பிறகு ம.நடராஜனின் திரைமறைவு அரசியல் மிக பிரபலம்!
ஆனால் ஜெயலலிதா இவரை அரசியல் ரீதியாக ஏற்க மறுத்து ஒதுக்கியே வைத்தார். எனினும் தமிழ் உணர்வாளராக பல்வேறு தளங்களில் இயங்கியே வந்தார் நடராஜன். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக.வில் சசிகலா கை ஓங்கியதும் மறுபடியும் அரசியல் ‘லைம்லைட்’டில் வந்தார் நடராஜன். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் நடராஜனின் அரசியல் கனவுகளும் கானல் நீரானது.
அது ஒருபுறமிருக்க, உடல் நலப் பிரச்னைகளாலும் முடங்கியிருக்கிறார் நடராஜன். 74 வயதான நடராஜனுக்கு, கல்லீரல் பாதிப்பு இருக்கிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங் மருத்துவ கல்லூரி மற்றும் குளோபல் மருத்துவமனையில் பணியாற்றும் பிரபல கல்லீரல் சிகிச்சை அளிக்கும் டாக்டர் முகமது ரேலா உள்ளிட்ட டாக்டர் குழுவினர் ம.நடராஜனை பரிசோதித்து தீவிர கல்லீரல் சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக அவருக்கு கல்லீரல் செயல் இழந்ததுடன் சிறுநீரகமும் செயல் இழந்து, நுரையீரலில் நீர்கோர்த்தது. இதனால் பல உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டு திடீரென்று ம.நடராஜனுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை அவசரமாக தேவைபட்டதால் உறுப்புதானம் அளிப்பவர்களிடம் இருந்து கல்லீரல் தானமாக பெற்று பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதுகுறித்து ம.நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறுகையில், ‘தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில் காத்திருப்போர் பட்டியலில் அவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவாக கல்லீரல் தானமாக கிடைத்தால் அவர் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது’ என்று கூறினர்.
இப்போதைய அரசியல் சூழலில் அவருக்கு உதவி செய்கிறவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாக சசிகலா குடும்பத்தினர் தரப்பில் வேதனைப்படுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.