Madras Day 2019 Celebration: சென்னை மாநகரின் அழகை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் டே ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. 380வது மெட்ராஸ் டே நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது . இந்த மெட்ராஸ் டே கொண்டாட்டத்தில் இந்தமுறை சென்னை மெட்ரோவும் பங்கெடுத்து கொள்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் உடன் இணைந்து மெட்ரோ ரயிலில் சிறப்பு கேபின்களை அமைத்து அதன்மூலம் தினமும் 25 நபர்கள் வீதம் நான்கு நாட்களுக்கு ( ஆகஸ்ட் 22 முதல் 25ம் தேதி வரை) இலவச பயணம் அழைத்து செல்கிறது. இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் திரைநட்சத்திரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
இந்த சிறப்பு கேபினில், சென்னை மாநகரின் பழைய போட்டோக்கள், ஓவியங்கள் உள்ளிட்டவைகள் இடம்பெற உள்ளன. இதுமட்டுமல்லாது, வினாடி வினா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு கேபின் கொண்ட ரயில், கோயம்பேடு மெட்ரோ ரயில் ஸ்டேசனிலிருந்து 22ம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்து விமானநிலயத்திற்கும் பின்பு மீண்டும் சென்ட்ரல் ஸ்டேசனிற்கும் இந்த ரயில் மக்கள் நெருக்கடி இல்லாத காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. வடபழனி மெட்ரோ ரயில் ஸ்டேசனில், போட்டோ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில்,சென்னையின் அரிய மற்றும் பழமையான போட்டோக்கள் இடம்பெற உள்ளன.