நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் விஷால் பிலிம் பேக்டரி. இந்த நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து விஷால் ரூ. 21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார்.
இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21,29,000-ஐ திருப்பி செலுத்தும் விஷாலிடம் லைக்கா நிறுவனம் கேட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் லைக்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விஷாலின் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.
-
சென்னை உயர் நீதிமன்றம்</p>
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 26) நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விஷால் தரப்பில்,” லைகா நிறுவனம் மேல்முறையீட்டுக்கு சென்றதால்தான் பணத்தை செலுத்தவில்லை. தனக்கு ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வட்டி கட்டி வருவதாகவும், 6 மாதங்கள் ஆனாலும் இந்த தொகையை செலுத்த இயலாது. ஒரு படத்தை எடுக்க பெரும் பாடுபடும் நிலையில், கடைசி நேரத்தில் தடை கோரப்படுகிறது” என்று வாதிடப்பட்டது.
அப்போது லைகா தரப்பில், “விஷால் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில், தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிக்கப்படுகிறது. எனவே கணக்கு விவரங்களை தாக்கல் செய்யட்டும்” என்று வாதிடப்பட்டது.
இதைக் கேட்டு குறுக்கிட்ட நீதிபதி, “படத்தில் நடிக்கும்போது கடனை திரும்ப செலுத்தலாமே? திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டது என சொல்ல வருகிறீர்களா?” என விஷாலிடம் கேள்வியெழுப்பினார்.
இதற்கு விஷால் தரப்பில், சினிமா வாழ்க்கை முடிந்ததாக கூறவில்லை. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “”விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கு செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil