மோட்டார் வாகனச் சட்டத்தின் படி இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஆனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதை செயல்படுத்தாமல் இருந்தது மாநில அரசு.
இச்சட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து காவல் துறை தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்
ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஹெல்மெட் இல்லாமல் பின்னால் அமர்ந்து வந்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் பயணித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறித்த அறிக்கையினை விரைவில் தாக்கல் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.