10.5% special reservation for Vanniyars : தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அதிமுக அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர் பிரினருக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை வழங்கியது. 20% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் இனத்தினருக்காக 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கி பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிராக பரமக்குடி பாலமுரளி உள்ளிட்ட 60 நபர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்று நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் பாலு கூறியுள்ளார்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்காக 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு வன்னியர்களுக்கு 7% மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது. இந்த சட்டத்திற்கு பிறகு 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்கள் பிரிவில் வரும் 7 உட்பிரினருக்கு, (வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், படையாச்சி , பள்ளி, அக்னிகுல சத்திரியர்கள்) வழங்கப்பட்டது. 25 எம்.பி.சி மற்றும் 68 சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடும், மீதம் உள்ள 22 எம்.பி.சி பிரிவினருக்கு 2.5% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil